எடப்பாடி பழனிசாமி பேசுவதை மக்கள் காமெடியாக எடுத்துக்கொள்கிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியதற்கு பெருமை அடைகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாமக்கல் மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 810 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாமக்கல்லை மாவட்டமாக உயர்த்தியவர் கருணாநிதி. மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது திமுக அரசு. புதுமைப் பெண் திட்டத்தில் நாமக்கல்லில்தான் அதிக அளவிலான மாணவிகள் பயன் பெறுகின்றனர்.
அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நாமக்கல்லுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடி நிதி வழங்கப்படும். நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நானே நேரடியாகச் சென்று, கள ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.
அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது குறித்து பெருமை அடைகிறேன். திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அவர் கூறுவதை மக்கள் காமெடியாக எடுத்துக்கொள்கின்றனர். பெண்களிடம் கேட்டால், தி.மு.கவின் மதிப்பு அவருக்கு தெரியும்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மதிப்பு அடமானம் வைக்கப்பட்டிருந்தது. இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் நம்ம திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து நடைபோட வைப்போம்" என பேசியுள்ளார்.