என் கவலை எல்லாம் இதை பற்றித்தான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஸ்டாலின் பிறந்தநாள்
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கவலை
அங்கு, ”அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.” என முழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகளும் அதனை வழிமொழிந்து கோஷம் எழுப்பினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். இங்கு இருக்க கூடிய இருமொழி கொள்கையே தொடர வேண்டும். இதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி. எனது கவலைகள் அனைத்தும் மாநில உரிமைகள் பற்றியதுதான்" என கூறினார்.
இதனை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் கருப்பு சிவப்பு நிற கேக் வெட்டி கொண்டாடினார். முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க பரிசு பொருட்களுடன் திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவாலயத்தில் குவிந்துள்ளனர்.