ஆளுநர் மீது 15 பக்கத்திற்கு புகார் - ஜனாதிபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
ஆளுநர் மீது புகார் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் மீது புகார்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிக்கையை வெளியிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் தற்போது நிலவக்கூடிய அரசியல் சூழல், தமிழக அரசுடன் ஏற்பட்டு வரும் மோதல் போக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அமித்ஷாவுடன் விவாதித்ததாக தகவல் வெளியாகியது.
ஜனாதிபதிக்கு கடிதம்
இந்நிலையில், தமிழக ஆளுநர் ரவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு 15 பக்க புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படவில்லை.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட மசோதாக்கள் நிலுவை, முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.