விழுப்புரம் திமுக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட செஞ்சி மஸ்தானின் உறவினர்கள்!!
அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று தனது விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வடக்கு செயலாளர் பொறுப்பு டாக்டர் சேகருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளரையும் அறிவித்துள்ளது திமுக தலைமை. கட்சியின் வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமின்றி அவரின் உறவினர்கள் பலரும் அடுத்தடுத்த கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், செஞ்சி பேரூர் கழக செயளாளராக இருந்த மஸ்தானின் சகோதரர் காஜா நஜீர் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதில் பெறும் புகைச்சலை உண்டாக்கிய மரக்காணம் கள்ளச்சாராயம் வழக்கில் அவரின் பெயர் அடிபட்டதே காரணமாகவும் கூறப்படுகிறது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார் செஞ்சி மஸ்தானின் மைத்துனர் ரிஸ்வான். திண்டிவனம் கவுன்சிலர்கள் 13 பேர் கடந்த செப்டம்பரில் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு எழுதி அதில், நகர்மன்றத் தலைவராகப் பதவி வகிக்கும் நிர்மலா செயல்படாத தலைவராக இருப்பதாக குறிப்பிட்டு, அனைத்து கட்டுப்பாடும் ரிஸ்வான் வசம் இருப்பதாக குற்றம்சாட்டியதாக தகவல் வெளிவந்தன.
அதனை தொடர்ந்து பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் ரிஸ்வான். செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் செஞ்சி பேரூராட்சி தலைவராக உள்ளார்.