குடிப்பவர்களை குடிகாரர்னு சொல்லாதீங்க, என்னால் பொறுத்துக்க முடியாது - கடுப்பான அமைச்சர்!
தமிழ்நாட்டில் மதுவிலக்கு துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுவிலக்கு அமைச்சர்
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதால் அவரது பொறுப்பில் இருந்த மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துச்சாமி கூறுகையில், "டெட்ரா பேக் திட்டம், 90 எம்எல் திட்டம் இன்னும் ஆய்வில் தான் உள்ளது. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். தமிழகத்தில் இந்த அரசை பொருத்தவரை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்கும் எண்ணம் இல்லவே இல்லை" என்று கூறினார்.
கடுப்பான அமைச்சர்
இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "காலையில் குடிப்பவர்களைக் குடிகாரர் என்று யாராவது சொன்னால், அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. காலையில் கடுமையான வேலைக்குப் போகிறவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். சாக்கடை அடைத்திருந்தால் மூக்கை மூடிக்கொண்டு சென்றுவிடுகிறோம்.
அதைச் சுத்தம் செய்பவர்களை ஏன் கேவலமாகப் பேசுகிறீர்கள். அவர்களின் நிலை குறித்து தகவல் வந்ததால்தான் டாஸ்மாக் திறக்கும் நேரம் பற்றி ஆய்வுசெய்தோம். ஆனால், அதில் எந்த முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. எங்கள் நோக்கம் அவர்கள் மதுவுக்காக தவறான இடங்களுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதுதான்" என்று கூறியுள்ளார்.