டாஸ்மாக் கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது - அமைச்சர் முத்துசாமி!
கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடியுள்ளது. இன்னும் 1,000 கடைகளை மூடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது. அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. மக்களை அதற்கு நாம் தயார் செய்ய வேண்டும். மதுப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும்.
கள்ளுக்கடைகள்
மதுப்பழக்கத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணமாக உள்ளது. மதுப்பழக்கம் உள்ளவர்களை அதிலிருந்து விடுபட வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.