நீட் தேர்வு முறைகேடு: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது - மா.சுப்பிரமணியன்!
நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
மா.சுப்பிரமணியன்
தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சமுதாயம் பொங்கி எழுந்து வருகிறது. 23 லட்சத்து 33,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதினார்கள்.
அடுத்தகட்ட நடவடிக்கை
அத்தனை பேருக்கும் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற தகவல் முறையாக தெரிவிக்கப்படவில்லை. இப்படி பல குழப்பங்கள் இதில் இருக்கின்றன. நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்று சொல்வது 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப்' போன்றது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சட்டத்துறை சார்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.