பிரபல pub-இன் மேற்கூரை இடிந்து விழுந்து கோரவிபத்து - 3 பேர் பலி!
சென்னையில் உள்ள கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
பிரபல pub
சென்னை ஆழ்வார்பேட்டையில் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள பிரபல பப் ஒன்று செயல்பட்டு வருகிறது.நேற்றிரவு எதிர்பாராத விதமாக விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியினர் துரிதமாக செயல்பட்டு வந்தனர்.
அப்போது, சுமார் 20- 22 பேர் இருந்ததாகவும் அவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தை சேர்ந்த சைக்ளோன் ராஜ் (45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (21) மற்றும் லாலி (22)பலியான இந்த மூவரும் பப்பில் ஊழியர்களாக பணியாற்றியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கோரவிபத்து
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியது.
இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது.
விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” என கூறினார்.
மெட்ரோ பணி
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தன் தரப்பில் விளக்கமளித்தது, இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது. ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது.
மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” என குறிப்பிட்டுள்ளது.