டி20 WC; இந்தியா விராட் கோலியை தேர்வு செய்யாது, அது தான் நல்லது - மேக்ஸ்வெல் ஓபன் டாக்!
டி20 உலக கோப்பைக்கு இந்தியா விராட் கோலியை தேர்வு செய்யாது என நம்புகிறேன் என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
விராட் கோலி
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை நடந்த ஆர்சிபி போட்டிகளில் ஒருமுறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இந்த தொடரில் பேட்டிங்கில் மிரட்டிவரும் விராட் கோலி இதுவரை 316 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவராக இருந்து வருகிறார்.
இருப்பினும் அவரது ஸ்டிரைக் ரேட் போதுமானதாக இல்லை என்ற விமர்சனத்துக்கு உள்ளாகியுளார். அவர் 146.29 ஸ்ட்ரைக் ரேட்டில் 316 ரன்கள் அடித்தபோதிலும், டி20 உலகக்கோப்பையில் இடம்பெறக்கூடாது என்றும்,அவரை விடவும் ஐபிஎல் தொடரில் பல இந்திய வீரர்கள் நல்ல ஸ்டிரைக்ரேட்டில் ஆடுவோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தொடர்ந்து கருத்துக்கள் வெளிவந்துகொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து கோலியின் சக RCB அணி வீரரான கிளென் மேக்ஸ்வெல் பேசிருந்தார்.
மேக்ஸ்வெல் ஓபன் டாக்
அதில், “நான் இதுவரை விளையாடிய எதிரணி வீரர்களில் சிறந்த கிளட்ச் வீரர் என்றால் அது விராட் கோலிதான். 2016 டி20 உலகக் கோப்பையின் போது மொஹாலியில் எங்களுக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ்தான் எனக்கு எதிராக அவர் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்.
போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய அவரது விழிப்புணர்வு அபாரமானது.இந்தியா அவரை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாது என்று நம்புகிறேன், ஏனெனில் அவர் எதிராக வராமல் இருப்பதுதான் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் நல்லது” என்றார்.
மேலும், இந்திய அணியில் பல சிறந்த வீரர்கள் இருந்தும் விராட் கோலியை பற்றி மட்டும் இது போல பேச்சுக்கள் வருவது இயல்பு தான் என்று கூறிய அவர், “1.5 பில்லியன் மக்கள் இந்தியாவில் இருப்பதனால் இதுபோன்ற கேள்விகள் எழுவதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை.
இந்தியாவில் பாதி பேர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள்தான் என்று நான் கருதுகிறேன் (சிரிக்கிறார்). இந்தியா ஒரு கடினமான அணி. 2024 ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர்களைப் பாருங்கள். அவர்கள் தனித்துவமான வீரர்கள். அதனால் ஒவ்வொரு வீரரின் மீதும் ‘நாம் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும்’ என்ற அழுத்தம் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.