மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி இன்று தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிமுகவினர் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனையடுத்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 8,555 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவு அருங்காட்சியகத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
அவற்றுடன் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அறிவுசார் பூங்காவும் முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.