தாய் கட்சியில் இணைய உள்ளேன் - காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்!
இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சி தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.
மன்சூர் அலிகான்
இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் இந்த ஆண்டின் மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அண்மையில், அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இது தொடர்பாக அவர் இணையத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு வற்புறுத்து கொடுக்கப்பட்ட ஜூஸில் ஏதோ கலந்து கொடுத்ததாகவும் அதை குடித்த உடன் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது அவரது உடல்நிலை சரியாகி வீடு திரும்பியுள்ளார்.
காங்கிரஸில் இணைகிறார்
இந்த நிலையில், மிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நடிகர் மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன். பிரதமர் மோடியை ஒரு சாதாரணக் குடிமகனாக கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.