நாட்டு மருந்து விற்று வாக்குசேகரிப்பு; நான் நல்ல கெட்டவன் எனக்கு வாக்களியுங்கள் - மன்சூர் அலிகான்
வேலூரில் நாட்டு மருந்து விற்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான்.
மன்சூர் அலிகான்
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அடுத்து உள்ள பொய்கை பகுதியில் நடைபெற்ற மாட்டு சந்தையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
சந்தையில் உள்ள ஆடு,மாடுகளை கட்டித் தழுவி கொஞ்சினார். பிறகு, அங்கிருந்த நாட்டு மருந்து கடைக்கு சென்று ஒலிபெருக்கியின் மூலம் நாட்டு மருந்துகளின் பெயர்களை கூறி விற்பனையில் ஈடுபட்டார்.
முன்னதாக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அவர் கூறியிருந்தார். ஆனால், அவரது கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிராக சிலர் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, சிறுபான்மையர்களின் ஓட்டு இல்லை என்றால் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காது.
வாக்குசேகரிப்பு
உலகத்தின் ஜனநாயக தொட்டில் என்று அழைக்கப்படுவது தமிழ்நாடு தான். மதத்தை வைத்து யாராவது ஒற்றுமையை குலைக்க நினைத்தால், அதை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் மலைகள் அதிகமாக இருப்பதால் கொடைக்கானலில் இருப்பது போல் மரங்களை கொண்டு வந்து நட்டு மலைகளை பசுமையாக்க வேண்டும். எனக்கு மூன்று கொள்கைகள் உண்டு. எனது தாயின் பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்து குறைந்தது 4 லட்சம் பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வட்டி இல்லாத கடன் கொடுக்க வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி ஏரிகளில் தண்ணீரை தேக்கி பசுமையாக மாற்றுவேன் என்றார்.
மேலும், மத்தியில் ஆளுபவர்கள் கெட்டவர்களாக இருப்பதால் அதைவிட நல்ல கெட்டவனாக நான் இருப்பேன் என்னை தேர்ந்தெடுங்கள் எனக்கு வாக்களியுங்கள். அதேபோல, பத்தாம் வகுப்பு பொது தேர்வு குளிர்காலங்களில் வைக்க வேண்டும் இவ்வாறு வாக்குறுதிகளை அடுக்கி வைத்தார்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஏற்கனவே இரண்டு முறை தோல்வி அடைந்த A.C சண்முகத்தை மீண்டும் வெற்றிகரமாக தோற்கடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.