கமலின் பின்னால் இருப்பது பாஜக தான் - மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தமிழ்தேச புலிகள் கட்சி என்கிற அமைப்பை தொடங்கியுள்ளார். சீமான் தனக்கு போட்டியிட இடம் தராததால் தனித்து தேர்தலைச் சந்திக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ்தேச புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அதற்காக இன்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்த தொகுதியில் மிகப்பெரிய பணமுதலைகள், ராட்சஸ பெருச்சாலிகள், ஆண்டவர்கள், ஆண்டுகொண்டு இருப்பவர்கள் போட்டியிடுகின்றனர். நான் கமலின் தீவிர ரசிகன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடலாம் என நினைத்தேன்.
கமலுக்காக தெற்கு தொகுதியை விட்டு கொடுத்து விட்டேன். நான் திண்டுகல்லில் போட்டியிட்டபோது செய்ததை எல்லாம் கமல் இப்போது செய்து வருகிறார். அதிமுகவில் அமைச்சர் வேலுமணி 15 வருசம் எம்.எல்.வாக இருந்து விட்டார். மக்களுக்கு சேவை செய்ய நான் வேலைகேட்டு வந்து உள்ளேன். கமலஹாசன் கால்சீட் கொடுக்காமல் இங்கே வந்து வாக்கிங் போயிட்டு இருக்கிறார்.
மக்கள் போராட்டத்திற்கு எதில் அவர் தலைமை தாங்கி இருக்கின்றார்.
கவர்ச்சி அரசியலை வைத்து என்னை முதல்வராக்குங்கள் என்பது முட்டாள்தனம். கமல் பின்னால் இருப்பது யார் என்றால் பா.ஜ.க வின் ஏ முதல் இசட் வரை அனைத்து டீமும் கமல் கட்சிதான் என்றார்.