வைரமுத்துவை நடமாட விடக்கூடாது - மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை
ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது என மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைரமுத்து பேச்சு
சென்னையில் அண்மையில் நடந்த கம்பன் விழாவில், வைரமுத்து பேசுகையில், வாலி வதை செய்த போது, ராமன் தனது மனைவியை இழந்து புத்தி சுவாதீனம் இன்றி இருந்தார் என கூறினார்.
அவரது இந்த பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து சமுதாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை
அந்த வகையில், மன்னார்குடி ராஜமன்னார் செண்டலங்கார ஜீயர் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், சமீபகாலமாக இந்துக்களுக்கு விரோதமான போக்கு அதிகரித்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க, இந்த அரசு கெடுபிடிகளை விதிக்கிறது.
சென்னையில் நடந்த விழா ஒன்றில், கவிஞர் வைரமுத்து, ராமபிரானை மனநிலை சரியில்லாதவர் என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும் பேசியுள்ளார்.
இந்துக்களுக்கு விரோதமாக இவர் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வைரமுத்துவை, சாலையில்நடமாட விடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.