மணிப்பூரில் தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்.. பழங்குடியினர் 3 பேர் படுகொலை!
பழங்குடியினதவறை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலவரம்
மணிப்பூரில் அதிகமாக வாழும் குக்கி இனக்குழு மக்களுக்கும், தாழ்வான நிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகமான மெய்த்தி இனத்தவருக்கும் இடையே மே 3 அன்று வன்முறை வெடித்தது. பொருளாதார நன்மைகள் மற்றும் மலையக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க வேலைகள் மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு காரணமாக போராட்டம் நடத்தி அது கலவரமாக வெடித்தது.
இதில் பலர் கொல்லப்பட்டனர், மேலும் சிலர் இடம்பெயர்ந்தனர். இந்த கலவரம் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது, மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது.
இந்த கலவரம் தொடங்கி 4 மாதங்கள் ஆகியும், இன்னுமும் கூட அங்கு பதற்றம் முழுமையாக நீங்கியபாடில்லை. மாறாக மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
படுகொலை
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூரின் தெங்னெவ்பால் மாவட்டத்தில் பல்லேல் நகரில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நேற்று மீண்டும் நேற்று அங்குள்ள கங்போப்கி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் தடைசெய்யப்பட்ட ஆயுத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இம்பால் மேற்கு மற்றும் கங்போக்கி மாவட்டங்களின் எல்லை பகுதியில் இருக்கும் இரெங் மற்றும் கரம் கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள காங்குய் பகுதியில் ஆயுத குப்பிகளை சேர்ந்தவர்கள் கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் குகி-சோ என்ற பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.