காதலியை கர்ப்பமாக்கி கொன்று புதைத்த கொடூர காதலன் - அதிர்ச்சி சம்பவம்!
விழுப்புரம் அருகே தனது காதலியை கர்ப்பமாக்கி கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் சடலம்
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6-ம் தேதி, 100 நாள் வேலை நடைபெற்றது. அந்தப் பணியில் ஈடுபட்ட கிராம மக்கள், வாய்க்காலை ஆழப்படுத்த முயன்றனர்.
அப்போது மனித உடலின் கைப்பகுதி தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கஞ்சனூர் போலீஸாருக்குத் தகவலளித்தனர். அதன்படி அங்கு வந்த போலீஸார், ஆய்வு செய்தபோது இளம் பெண்ணின் உடல் ஒன்று புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அப்போது ஒரு சிறுமி தனது சகோதரி போல் தெரிகிறது என்று கூறினார்.
விசாரணை
தொடர்ந்து, விசாரணை நடத்தியதில், அந்த சிறுமி "என்னுடைய சகோதரி சித்தேரிப்பட்டைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக்கும் இளைஞர் அகிலனை இரண்டு வருடமாக காதலித்துவந்தார். அவரால் மூன்று மாத கர்ப்பமாக இருந்த என்னுடைய சகோதரி, அவரைத் திருமணம் செய்துகொள்ள வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்" என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தகவலின்படி விசாரணை மேற்கொண்டனர், அதில் அகிலன் சென்னைக்கு அருகே இருப்பது தெரியவந்தது அங்கு சென்ற தனிப்படை போலீஸார், அகிலன், அவருக்கு உதவியாக இருந்த சுரேஷ்குமாரைக் கைதுசெய்தனர்.
அகிலனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, "என்னுடைய காதலி கர்ப்பமானதைத் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். 3-ம் தேதி, இருவரும் சாலவனூர் அருகே செல்லும்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
ஆத்திரத்தில் காதலியின் கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டேன். பிறகு, நண்பர்கள் உதவியோடு அருகில் இருந்த வாய்க்காலில் புதைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கர்ப்பமாக இருந்து கொலைசெய்யப்பட்ட பெண் 17 வயதுடைய சிறுமி என்பதால், இருவர் மீதும் போக்சோ, கொலை வழக்குகள் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.