கோவில் அருகே சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட சிறுவன்.. ஆத்திரத்தில் காரை விட்டு ஏற்றி கொன்ற நபர் - கொடூரம்!
சிருநீர் கழித்த நபரை தட்டி கேட்டதால் சிறுவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், காட்டாக்கடை பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார், இவரது மனைவி ஷீபா, கேரள தலைமைச் செயலகத்தில் பணிபுரிகிறார். இவர்களின் மகன் ஆதிசேகர் 15 வயதான இவர் காட்டாக்கடை சின்மயா மிஷன் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 30-ம் தேதி பூளிக்கோடு கோயில் அருகே நண்பருடன் விளையாடிவிட்டு, மாலை 5 மணியளவில் வீட்டுக்கு சைகிளில் சென்றார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த பிரியரஞ்சன் என்பவர் ஓட்டிச் சென்ற எலெக்ட்ரிக்கல் கார் அந்த சிறுவன் மீது ஏறி இறங்கியது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொடூரம்
இந்நிலையில், பிரியரஞ்சன் தனது காரை தொலைவில் நிறுத்திவிட்டு தலைமறைவானார். இதனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், அப்பொழுது சில தினங்களுக்கு முன்பு பிரியரஞ்சன் கோயில் அருகே சிறுநீர் கழித்ததாகவும், அது பற்றி தன் மகன் ஆதிசேகர் கேள்வி எழுப்பியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
அந்த சம்பவத்தை மனதில் வைத்து பழிவாங்குவதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபொழுது, அந்த சிறுவர் விளையாடிவிட்டு திரும்பி வரும் வரை சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் பிரியரஞ்சன் காத்திருந்தது தெரியவந்தது.
பிறகு அந்த சிறுவர் வந்ததும் இவர் வேகமாக காரை எடுத்து வேண்டுமென்றே மோதி கொன்றது தெளிவாக தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான பிரியரஞ்சனை தீவிரமாக தேடி வருகின்றனர்.