மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது மத்திய அரசு

hospital madurai loan aiims
By Jon Apr 11, 2021 01:10 PM GMT
Report

தமிழகத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது ரூ.1,264 கோடியில் இப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலிலும் எய்ம்ஸ் மருத்துவமனை பேசுபொருளாக இருந்தது. அதிமுக - பாஜக கூட்டணியை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் எய்ம்ஸ் விவகாரத்தை முக்கியமானதாக முன்னிறுத்தன.

ஜப்பான் அரசிடமிருந்து நிதியுதவி கிடைத்தால் தான் எய்ம்ஸ் பணி மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதில் நீடித்த இழுபறியால் இரு ஆண்டுகளாக பணி தொடங்கப்படவில்லை. இதற்கிடையே 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கடந்தாண்டு டிசம்பரில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.

இந்நிலையில் ஜப்பான், இந்தியா இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் பற்றி தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில விவரங்களைகோரினார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இந்த ஒப்பந்த ஆவணம் கிடைத்தப் பிறகுதான், முழு விவரத்தையும் தெரிவிக்க முடியும்’ எனத் தெரிவித்துள்ளது.