தாவூத் இப்ராஹிம் சொத்தை 1,300 மடங்கு கூடுதலாக ஏலம் எடுத்த வழக்கறிஞர் - இதுதான் காரணம்!
தாவூத் இப்ராஹிம் சொத்துக்களை 1,300 மடங்கு கூடுதல் தொகைக்கு வழக்கறிஞர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளார்.
தாவூத் இப்ராஹிம்
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. அது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 7 பேர் கலந்து கொண்டனர்.
இதில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, 15,440 ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை ரூ.2 கோடி கொடுத்து வாங்கினார். இது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 1,300 மடங்கு அதிகம்.
சொத்துக்கள் ஏலம்
மேலும், மற்றொரு நிலத்தை 3.3 லட்சம் கொடுத்து வாங்கினார். இதுகுறித்து பேசிய அவர், ''நிலத்தின் சர்வே எண், எனது பிறந்த நாள் மற்றும் நான் குறிப்பிட்ட தொகை நியூமராலஜி படி எனக்கு ராசியான ஒன்றாகும். எனவேதான் அதிக தொகை கொடுத்து வாங்கினேன். அந்த நிலத்தில் பள்ளி ஒன்று தொடங்கப்படும்.
தாவூத் பங்களாவையும் நான் தான் 2020ம் ஆண்டு வாங்கினேன். அதில் சனாத தர்ம பாடசாலை டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டு சொத்துக்கள் ஏலம் விடப்படாத நிலையில், அவை பின்னர் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.