50 கி.மீ தூரத்திற்கு முன்பே டிராபிக் ஜாம்; மிரட்டும் விஜய் - அதிரும் மதுரை!
விஜய்யின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது.
தவெக மாநாடு
2024 பிப்ரவரியில், நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதாக அறிவித்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்காமல், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தார். தவெகவின் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு 2025 (ஆகஸ்ட் 21) இன்று மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
குவியும் கூட்டம்
750-க்கும் மேற்பட்ட குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. RO நீர் வசதியும் உள்ளது. இந்த மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளன.
மேலும், "மக்கள் என் பக்கம்" என்ற பெயரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மதுரையில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே மாநாட்டு அரங்கத்தில் மக்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக மாநாட்டு மேடைக்கு முன்புறமும், விஜய் தொண்டர்களை பார்ப்பதற்காக நடந்து வரும் வகையில் மாநாட்டு மேயில் அமைக்கப்பட்ட சிறப்பு பாதையை சுற்றியும் பல ஆயிரம் பேர் இடம்பிடித்துள்ளனர்.
இதனால் மதுரைக்கு முன்பாக சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே டிராபிக் ஜாம் ஆகியுள்ளது. எனவே, மாநாட்டிற்கு வரும் விஜய் ரசிகர்கள் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வர வேண்டியுள்ளது.