திருமாவளவன் எப்படி தலித் தலைவர் ஆக முடியும்? எல்.முருகன் கேள்வி
திருமாவளவனின் முதலமைச்சராகும் கனவெல்லாம் நடக்காது என எல் முருகன் பேசியுள்ளார்.
எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழுக்கு பெருமை சேர்த்து வரும் நிலையில், பாஜக தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி என்ற கருத்தாக்கத்தை உருவாக்க திமுகவும், I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்களும் முயற்சி செய்கின்றனர் அது நடக்காது.
ஹிந்தி திணிப்பு
சென்னையில் ஒரு நாள் பெய்த மழையை கூட கையாள தெரியாமல் திமுக திணறி வருகிறது. கூவம், அடையாறு ஆற்றை சீர்படுத்தி அதன் உண்மையான எல்லைகளை கண்டறியாமல் சென்னையின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாதுஎன்பது 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை.
மக்களின் கவனத்தை திசைத் திருப்ப திமுக, கூட்டணிக் கட்சிகள் மொழி பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். மக்களிடத்தில் இது எடுபடாது. மக்கள் விழிப்புடன் உள்ளனர். இந்தியை யாரும் திணிக்கவில்லை. ஆளுநர் உண்மையை பேசுகிறார்.
விரும்பினால் இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளலாம், அதைத்தான் மும்மொழி கொள்கையும் வலியுறுத்துகிறது. திமுக அரசு மக்களை திசைத் திருப்புவதை விட்டுவிட்டு, சென்னையை வெள்ளத்தில் இருந்து மீட்டு, மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திருமாவளவன்
திருமாவளவன் முதலமைச்சராகும் கனவெல்லாம் நடக்காது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். அணைத்து தலித் மக்களையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும்.
இரட்டை வேடம் போடும் திருமாவளவன் எப்படி ஒரு தலித்தலைவராக இருக்க முடியும்? சமூக நீதியைப் பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. திருமாவளவனை ஒரு சின்ன கட்சியின் தலைவராகத்தான் பார்க்கிறேன்" என பேசியுள்ளார்.