களைகட்டிய கூவாகம் கோயில் சித்திரை திருவிழா - அசைந்து ஆடி வந்த திருத்தேரோட்டம்!
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்.
கூவாகம் சித்திரை திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற சித்திரை பெருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.
திருநங்கை சமூகம் தங்களது குலா தெய்வமாகக் கூத்தாண்டவரை கருதி இக்கோயிலில் வழிபாடு செய்வார்கள். உலக பிரசித்தி பெற்ற இந்த திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் நிகழ்ந்தது.பொதுவாக இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். தினந்திரும் சுவாமிக்கு சிறப்பு வழிப்பாடுகள் நடைபெற்றன.
ஆடி வந்த திருத்தேரோட்டம்
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, கூத்தாண்டவர் சன்னதி முன்பு கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு, கும்மியடித்து, ஆடி-பாடி மகிழ்ந்து தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து தேரை ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வடம்பிடித்து இழுக்கின்றனர். அரவானின் பிரம்மாண்ட சிரசு உடன் தேரானது வலம் வருகிறது.
இந்தத் தேர் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக சென்று பந்தலடிக்கு செல்லும்.
அங்கு அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் திருநங்கைகள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
அரவான் களப்பலிக்குப் பிறகு பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து தலைமுழுகி வெள்ளை புடவை உடுத்தி வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து அழுது சோகமாக வீடு திரும்புவார்கள். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.