அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குபதிவு: உயர்நீதிமன்றம் அதிரடி
ஊழல் புகார்களின் அடிப்படையில் உரிய ஆதாரங்கள் இருப்பதால் தமிழக நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குபதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அமலாக்கத்துறையினர் அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டது.
இதன் அடிப்படையில் உரிய ஆதாரங்களுடன் வழக்குபதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

தொடர்ந்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஜே.எஸ்.இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், அமலாக்கத்துறையினர் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மீது வழக்குபதிவு செய்து விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, முறைப்படி வழக்குபதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி,
கே.என்.நேருவின் தேர்தல் பணியை முடக்குவதற்காக சதி நடக்கிறது. 41 தொகுதிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவரை முடக்க பாஜக சதி செய்கிறது.
2016ல் கண்டெய்னரில் 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ப.சிதம்பரத்தை கைது செய்து 100 நாள் சிறையில் வைத்தார்கள். அந்த அமலாக்கத்துறையின் வழக்கு என்னவானது?
வழக்கு தொடுத்தவர்கள் வெட்கி தலைகுனியும் அளவுக்கு சட்டரீதியாக போராடுவோம், அச்சுறுத்தலுக்கு பயப்படுகிற ஆள் இல்லை, துன்புறுத்தினால் தீவிரமாக பணியாற்றுவார் என தெரிவித்துள்ளார்.