கருப்புக் கொடி காட்டிய மாணவர்கள்; சாலையில் அமர்ந்த ஆளுநர் - பரபர சம்பவம்!
ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SFI எதிர்ப்பு
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கொல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்காகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலமேல் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கையில் SFI மாணவர் அமைப்பினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
உடனே, காரை நிறுத்திவிட்டு போராட்டக்காரர்களுடன் நேரடியாக ஆளுநர் ஆரிப் முகமது கான் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து மாணவர் அமைப்பினர் முழக்கமிட்டதால் அருகே இருந்த டீக்கடையில் அமர்ந்துகொண்டு தர்ணாவில் ஈடுப்பட்டார்.
தர்ணா போராட்டம்
மேலும், கறுப்புக்கொடி காட்டி போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை டீக்கடையை விட்டு வெளியே வரமாட்டேன் என்று வலியுறுத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை தலையிட வைப்பதாக குற்றம்சாட்டி எஸ்எப்ஐ மாணவர் அமைப்பு கேரள ஆளுநருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
முன்னதாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் போர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.