சேகர் பாபு பதவி விலகவேண்டும்..ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த அண்ணாமலை..!!
அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை வள்ளுவர் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேகர் பாபு பதவி விலகவேண்டும்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலகவேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்திருந்தார். இது அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாடு கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.
அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை. ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார் என குறிப்பிட்டிருந்தார்.
தர்ணா செய்த அண்ணாமலை
வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர் பாபு பதவி விலக வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை வள்ளுவர் கூட்டத்தில் அமைந்துள்ள அறநிலைய துறை அலுவலகத்தின் அருகில் ரோட்டில் அமர்ந்து அண்ணாமலை கட்சி தொண்டர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையில், அறநிலைய துறை அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட பாஜகவை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.