புதுசா கல்யாணம் ஆனவங்களா? துணையிடம் இதை எதிர்பார்க்காதீங்க - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
எதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது ஏமாற்றத்தை கொடுக்கலாம்.
திருமணம்
திருமண வாழ்க்கை என்றாலே எப்போதுமே மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமற்ற எதிர்பார்ப்பு. குறிப்பாக தேனிலவு காலத்தில் இருக்கின்ற குதூகலமும், மன ஒற்றுமையும் எப்போதுமே நீடிக்கும் என்று சொல்லி விட முடியாது.
ஒவ்வொரு நபரிடமும் சில நிறைகுறைகள் இருக்கத்தான் செய்யும். நம் வாழ்க்கை துணையின் குணாதிசயங்களை மாற்றியமைத்து விடலாம் என்று நாம் திட்டமிடுவதும், அதற்கு முயற்சி செய்வதும் மோதலை ஏற்படுத்தி விடும்.
எதிர்பார்ப்புகள்
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நல்லவிதமான உரையாடலை மேற்கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கவே கூடாது என்று நாம் எதிர்பார்க்க முடியாது. முக்கியமான முடிவுகளில் இருவரும் கருத்து ஒற்றுமை கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.
சில சமயம் நாம் சமரசங்களை செய்து கொண்டு நம் வாழ்க்கை துணையின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கலாம். பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமான சிந்தனைகள் மற்றும் லட்சியங்கள் இருக்கும்.
துணை எப்போதும் நம் சிந்தனையை ஒட்டி நடப்பவராக, நம்முடைய லட்சியங்களை அவர்களுடைய லட்சியமாக கருத வேண்டும் என்பவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.