கமலை அசிங்கப்படுத்திய திமுகவின் கரு.பழனியப்பன் - சினேகன் பதிலடி!
கரு.பழனியப்பனும் கமல்ஹாசனை அசிங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரு.பழனியப்பன் சாடல்
சிவகங்கை, திருப்பத்தூரில் நடந்த திமுக கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசுகையில், ''விஜய் இந்தியை எதிர்த்து அரசியல் செய்கிறார். நாங்களும் அதைத் தான் செய்கிறோம்.
இதனால் அவர் எங்களுடன் வந்து விட வேண்டியது தானே. புது ஐட்டம் விற்றால் தானே தனிக்கடை போட வேண்டும். ஆனால் நான் விஜய்யை எந்த மேடையிலும் விமர்சிக்க மாட்டேன். ஏன் என்றால் திமுக தான் அடுத்த முறை விஜய்க்கு எம்.பி. சீட் கொடுக்க வேண்டும்.
அவர் திமுகவுக்கு வந்து விடுவார்'' என்றார். இந்நிலையில், இந்த பேச்சுக்கு மநீமவின் நிர்வாகி சினேகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''கரு.பழனியப்பன் பேசியது சரியல்ல. அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதும், பின்பு கூட்டணி சேருவதும் இயல்பு தான்.
சினேகன் பதிலடி
இதே கரு.பழனியப்பன் ஆரம்ப காலங்களில் திராட இயக்கத்தை எவ்வளவு விமர்சித்தார்? என மிகப்பெரிய பட்டியலே கொடுக்க முடியும். தெருவில் நடப்பவர்களுக்கு இவர்கள் ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை. இரண்டு தேர்தலில் எங்களின் பலம் என்ன என்பது தெரிந்து தான் சீட் கொடுத்தார்கள்.
மேலும் எங்கள் தலைவரின் முகம் அவர்களுக்கு தேவைப்பட்டதால் தான் சீட் கொடுத்து இருக்கிறார்கள். அதுவும் எங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சீட்டை தான் கொடுத்திருக்கிறார்கள். தேர்தலில் திமுகவிடம் ஒரு பைசா கூட வாங்காமல் திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்தோம்.
இந்த உழைப்புக்கான சன்மானம் தான் எம்.பி சீட். கரு.பழனியப்பன் யாருக்காக வேலை பார்க்கிறார்? திமுகவில் இருந்து கொண்டே கூட்டணியை உடைக்க பார்க்கிறாரா? இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டியது திமுகவின் கடமை'' என்றார்.
திமுகவினரின் பேச்சுக்கு கமல்ஹாசனின் பதில் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என பதிலடி கொடுத்துள்ளார்.