அமித்ஷாவின் தமிழ்நாட்டு பயணம் ரத்தானதுக்கு காரணம் இதுதான்..போட்டுடைத்த கனிமொழி!
எவ்வளவு முயன்றாலும் தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
அமித்ஷா பயணம் ரத்து
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிக்க தீவிர தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழகத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தேனி தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து கனிமொழி கம்பம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், "இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தான் அமித்ஷா ஏன் தனது தமிழ்நாட்டு பயணத்தை ரத்து செய்தார் என தெரிகிறது.
பாஜகவிற்கு ஒரு ஓட்டு கூட தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து வராது என்பது நன்கு தெரிகிறது. தமிழ்நாட்டைக் கண்டாலே அவர்களுக்குப் பிடிப்பதில்லை.
போட்டுடைத்த கனிமொழி
நமது தமிழகத்திற்கு நமக்கு வரவேண்டிய நிதியும் வராது, ஒரு ரூபாய் நிதி கொடுத்தால் 29 பைசா தமிழ்நாட்டிற்கு திருப்பித் தருகிறார்கள். மழை, வெள்ளம் வந்தால் நிவாரணம் கூட வராது.
அவர்கள் ஆட்சியில் எந்த திட்டமும் வராது. நம் கஷ்டப்பட்டபோது ஒருமுறை கூட பிரதமர் மோடி வந்து எட்டிப்பார்க்கவில்லை. இப்போது தேர்தல் என்பதால் மாதத்திற்கு 8 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தான் உள்ளார். அடுத்த வாரம் கூட பிரதமர் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளார்.
மக்களிடையே மத ரீதியாக, இன ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்துவது பாஜக தான். உலகம் முழுவதும் சுற்றும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டை எட்டி கூட பார்க்காத பிரதமர் மோடி, இப்போது தேர்தல் வந்ததும் தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வருகிறார். டிடிவி தினகரன் மீது வழக்குகள் உள்ளதால் தான், அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை இவை எல்லாம் தான் பிரதமர் மோடியின் குடும்பம். பிரதமர் மோடி எவ்வளவுதான் முயன்றாலும், தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.