கங்காரு வடிவிலான பொம்மை கேக்கை வெட்ட மறுப்பு பிரபல கிரிக்கெட் வீரர் - ஏன் தெரியுமா?
கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு ஆகும். அந்த வடிவிலான கேக்கை வெட்ட நான் ஒருபோதும் விரும்பமாட்டேன் என்று பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே தெரிவித்திருக்கிறார். கேப்டன் ரஹானே இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறம்பட வழிநடத்தியவர்.
இவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கோலி இல்லாத சமயங்களில் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். மெல்போர்ன், சிட்னி மற்றும் காபா என மூன்று மைதானங்களில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்தியதோடு 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்ற உதவியவர். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய அவருக்கு மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு பக்கத்தில் வாழும் அக்கம் பக்கத்தினர் தடபுடலான ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆரவாரமாக அனைவரும் ரஹானேவை வரவேற்றனர். அப்போது, கேக் ஒன்றை தயார் செய்து கொண்டு வந்தனர். அந்த கேக்கை வெட்ட சென்றபோதுதான் அதில் கங்காரு பொம்மை வடிவில் பொம்மை ஒன்று இருந்ததை ரஹானே பார்த்தார். உடனடியாக அந்த கேக்கை நான் வெட்டமாட்டேன் என்று மறுத்தார்.
இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான கலந்துரையாடலில் ரஹானே பேசுகையில், "கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. எனவே அந்த வடிவிலான கேக்கை வெட்ட நான் எப்போதும் விரும்ப மாட்டேன். உங்களின் எதிரணியை நீங்கள் எப்போதும் மதிக்க வேண்டும்.
வெற்றியோ தோல்வியோ அல்லது வரலாற்றை படைக்கிறோமோ எப்போதும் எதிரணியையும், அந்த நாட்டையும் நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் தான் நான் கங்காரு பொம்மை கேக்கை வெட்ட மறுத்து விட்டேன் என்றார்.