அமெரிக்கா வரலாற்றில் இதுவே முதல் முறை - கமலா ஹாரிஸ் படைத்த சாதனை
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார வரலாற்றில் கமலா ஹாரிஸ் சாதனை படைத்துள்ளார்.
அதிபர் தேர்தல்
வரும் நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வேட்பாளராக களமிறங்கியதற்கு சொந்த கட்சியிலே எதிர்ப்பு கிளம்பியது. ஜோ பைடன் உடல் நிலையை காட்டி தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டுமென வேண்டுகோள் வைத்தனர்.
கமலா ஹாரிஸ்
இதன் பின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் துணை அதிபரான கமலா ஹாரிஸை வேட்பாளராக தேர்வு செய்ய ஆதரவு வழங்கியுள்ளார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் நான் வெற்றி பெற விரும்புவதாக அறிவித்த கமலா ஹாரிஸ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான நன்கொடையாளர்கள் நிதி அளித்துள்ளனர். 24 மணி நேரத்தில் அவருக்கு 81 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ 677 கோடி ஆகும்.
அமெரிக்கா தேர்தல் பிரச்சார வரலாற்றில் மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக அளவில் தேர்தல் நன்கொடை குவிந்திருப்பது இதுவே முதல் முறை. இதில் பெரும்பாலானோர் முதல் முறையாக நிதி அளித்துள்ளனர். ஜோ பைடன் வேட்பாளராக இருந்த போது இந்தளவுக்கு நிதி கிடைக்கவில்லை. ஏற்கனவே துப்பாக்கி சூடு மூலம் ட்ரம்பிற்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்திருந்த நிலையில் கமலா ஹாரிஸுக்கும் வரலாறு காணாத வகையில் தேர்தல் நிதி குவிந்துள்ளதால் அமெரிக்கா அதிபர் தேர்தல் சூடு பிடித்துள்ளது.