ரவி என்ற பெயரை புவி என்று மாற்றிக்கொள்வாரா - ஆளுநருக்கு கமல் சரமாரி கேள்வி!
ஆளுநர் ரவி, தமது பெயரை புவி என்று மாற்றி கொள்வாரா? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி "இந்த மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக மூத்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அதன் வரிசையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரை' யில் நடைபயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு, சென்னையில் விருந்து அளித்தார்.
கமல் கேள்வி
அப்போது பேசிய அவர், " பலகட்ட போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது. இதனை மாற்றுங்கள் என்று சொல்லுவதற்கு ஆளுநர் யார்? ரவி என்ற அவருடைய பெயரை புவி என்று மாற்றிக் கொள்ள சொன்னால் அதற்கு அவர் உடன்படுவாரா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவின் மத அரசியலை எதிர்ப்பதற்காகவே காங்கிரஸ் நடத்தும் பாரத் ஜோடா யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்றது. மதத்துக்கு எதிரான இந்த அரசியலை எப்படியாவது தடுத்தே ஆக வேண்டும். பாஜகவின் அரசியல் மதத்துக்கானது; மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மக்களுக்கானது' எனவும் தெரிவித்துள்ளார்.