இயேசுவின் மறுபிறவி எனக் கூறி தனி ஊரை உருவாக்கிய ஆசாமி... கம்பி எண்ணும் கதை!
சைபீரியாவில் இயேசுவின் மறுபிறவி என கூறி ஆசாமி ஒருவர் மக்களை ஏமாற்றியிருக்கிறார்.
ரஷ்யா
இயேசுவின் மறுபிறவி எனக் கூறிக் கொண்டு தனி ஊரை உருவாக்கியவர் செர்கே டோரோப். தெற்கு ரஷ்யாவில் 1961 ஜனவரியில் பிறந்த இவர், சோவியத் ரஷ்யாவில் போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.
1989ஆம் ஆண்டில் அரசு வேலையை உதறிவிட்டு, இறைபணியில் ஈடுபட்டு வந்த அவர், 1991ல் தொடங்கியதுதான் கடைசி ஏற்பாட்டு தேவாலயம் என்ற திருச்சபை. இயேசுநாதரைப் போல் வெள்ளை நிற அங்கி மற்றும் நீண்ட தலைமுடியுடன் காட்சியளித்து, சீடர்களுக்கு போதித்து வந்தார்.
இயேசுவின் அவதாரம்
தான் கடவுள் அல்ல, இயேசுவும் கடவுள் அல்ல; கடவுளின் வார்த்தையே நான் என்ற அவரது பேச்சில் மயங்கியவர்களில் வெளிநாட்டினரும் ஏராளம். டிசம்பர் 25ஆம் தேதிக்கு பதிலாக, இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது செர்கோ டோரோப்பின் பிறந்தநாளான ஜனவரி 14.
பிரசங்கம் செய்து வந்த அவருக்கு, சைபீரியாவில் மட்டுமே சீடர்களின் எண்ணிக்கை சுமார் 7 ஆயிரம். சீடர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் வாங்கிய நன்கொடைகள் மூலம் தனி ஓர் ஊரை உருவாக்கினார்.
செர்கே டோரோப்
அவரது ஊரில் புலால், மது மற்றும் பணத்தை பயன்படுத்த அனுமதி இல்லை என்றாலும், அவர் மட்டும் பக்தர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டார். தனி சிம்மாசனம், அதன் முன்பு ஒரு மைக் என பிரசங்கத்தை நடத்தி வருவார் செர்கே டோரோப்.
பாலியல் அத்துமீறல், பண மோசடி என புகார்கள் குவிந்ததால், 2020 செப்டம்பரில் செர்கேவை கைது செய்தது ரஷ்ய போலீஸ். இயேசுவின் மறுபிறவி என மக்களுக்கு அறிவுரைக் கூறியவர், இப்போது இரண்டு ஆண்டுகளாக சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.