அடுத்த டி20 கேப்டன் - தலைமை பயிற்சியாளர் யார்..? ஜெய் ஷா முக்கிய தகவல்!
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் மற்றும் டி20 கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
வீரர்கள் ஓய்வு
2024 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையை கைப்பற்றியதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் அறிவித்தனர்.
இதனிடையே ரவீந்திர ஜடேஜாவும் நேற்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர்கள் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர்.
மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. இதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் மற்றும் டி20 கேப்டன் யார்? என்பது குறித்து மக்களிடையே ஆவல் எழுந்துள்ளது.
ஜெய் ஷா தகவல்
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் மற்றும் டி20 கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு நியமனம் விரைவில் செய்யப்படும்.
அதற்கு கமிட்டி நேர்முகத்தேர்வு செய்து 2 பெயர்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள். மும்பைக்கு சென்றதும் அதைப்பற்றி முடிவெடுக்க உள்ளோம். அடுத்த கேப்டன் யார்? என்பதை தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள்.
அது பற்றி தேர்வுக் குழுவுடன் நாங்கள் விவாதிக்க உள்ளோம். ஹர்திக் பாண்ட்யா பற்றி நீங்கள் கேட்டீர்கள். அவருடைய பார்ம் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால் தேர்வுக் குழுவினர் அவர் மீது நம்பிக்கை வைத்தனர்.
அதை அவர் நிரூபித்துள்ளார். 3 நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றதிலிருந்தே இந்தியா டி20 கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.