ஜெயலலிதா நினைவிடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கப் போவதாக இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8ம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். இந்நிலையில் நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த மாதம் 27ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இதன்பின்னர் சில நாட்களிலேயே பராமரிப்பு பணிகளுக்காக நினைவிடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சசிகலாவின் வருகையை தொடர்ந்தே இது நடந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கப் போவதாக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
டிஜிபி அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்து மிரட்டல் விடுத்த கொருக்குப்பேட்டை இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.