பாஜக ஒரு RCB அணி மாதிரி தோற்றுக் கொண்டே தான் இருக்கும்...ஜெயக்குமார் கிண்டல்!
பாஜகவை ஆர்சிபி அணியுடன் ஒப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
பாஜக - ஆர்சிபி
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அதில் பதிவான வாகு எண்ணிக்கை கடந்த ஜூன் 4ம் தேதி நடந்து முடிவுகள் வெளியானது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் தோல்வியை சந்தித்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணி 12 தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியும் தோல்வி அடைந்தது. இம்முறை அதிமுக, பாஜக இரு கட்சிகளும் தோல்வி அடைந்துள்ள நிலையில்,
அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது, "அண்ணாமலை ஒரு புள்ளி ராஜா ஆகிவிட்டார். புள்ளி விவரம் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரியாக செயல்பட்டாரே தவிர,
ஜெயக்குமார்
ஒரு கட்சியின் மாநில தலைவர் போல அண்ணாமலை செயல்படவில்லை.2014ல் இதேபோல, அதிமுக தனியாக நின்றது. பாஜகவுடன் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தார்கள். அப்போது வாங்கிய ஓட்டை விட பாஜக கூட்டணி குறைவாகவே ஓட்டு வாங்கியுள்ளது. 10 வருடங்களில் பாஜக வாக்கு குறைந்துள்ளது. என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியை 8 முறை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தும் ஒரு சீட் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை. இத்தனைக்கும் பாஜகவின் ஸ்ட்ராங் பெல்ட்டாக இருக்கும் கன்னியாகுமரியிலேயே வர முடியவில்லை. பாமக வலுவாக இருக்கும் தருமபுரியிலும் பாஜக கூட்டணியால் ஜெயிக்க முடியவில்லை. பாஜகவுக்கு ஒரு வளர்ச்சியும் இல்லை.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணி தோற்றுக்கொண்டே தான் இருக்கும். அதேபோலத்தான் பாஜக ஆர்சிபி அணியைப் போல தோற்றுக் கொண்டே இருக்கும். நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல. 30 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். பல தேர்தல்களில் வென்றோம், சிலவற்றில் தோற்றோம், வரும் தேர்தலில் மீண்டும் வெற்றியை பெறுவோம்." என கிண்டல் செய்துள்ளார்.