காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சேவல் - தெலுங்கானாவில் பரபரப்பு..!
தெலுங்கானாவில் சேவல் ஒன்றை போலீசார் சிறையில் அடைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராம மக்கள் புகார்
தெலுங்கானா மாநிலம் மகபூபநகர் மாவட்டத்தில் பூரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் சிறுவன் ஒருவன் கையில் சேவல் ஒன்றை பிடித்துக் கொண்டு நடந்து சென்றுள்ளான்.
இதை கண்ட அப்பகுதி கிராம மக்கள் அந்த சிறுவன் சேவலை திருடிக் கொண்டு செல்வதாக நம்பி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் சென்ற போலீசார் சிறுவன் அவன் கையில் வைத்திருந்த சேவலையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறுவன் 18 வயது நிரம்பாததால் அவனது பெற்றோரை வரவழைத்து போலீசார் சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட சேவல்
அதே சமயம் சேவலை காணவில்லை என்று யாரும் புகார் அளிக்காததால் அந்த சேவல் யாருடையது என்று தெரியாததால் போலீசார் பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறை அதிகாரி ராமேஷ்பாபு சேவலை சிறையில் அடைத்தார். பின்னர் சேவலுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்தார்.
சேவல் சிறையில் அடைக்கப்பட்ட செய்தியறிந்த அந்த பகுதி மக்கள் காவல் நிலையம் சென்று சிறையில் இருக்கும் சேவலை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.