போரை நிறுத்த ரெடி; ஆனால் இதுதான் கண்டிஷன் - இஸ்ரேல் பிரதமர் தகவல்!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ்
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த அக். 7ஆம் தேதி ஆரம்பித்த போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏவுகணை தாக்குதல் தொடங்கிப் பல வகை தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.
இதற்கு பதிலடியில் இறங்கிய இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கிடையில், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழிவகை செய்யும் வகையில் இஸ்ரேலே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
பிரதமர் தகவல்
இந்நிலையில் பேட்டியளித்துள்ள இஸ்ரேல் பிரதமர், "காசாவில் உள்ள ஹமாஸ் ஆட்சியாளர்களை முழுமையாக அழிப்பது தான் எங்கள் நோக்கம். பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு தேவை. போர் முடிந்தாலும் கூட அதன் பிறகும் பாதுகாப்பு தேவை என்றே கருதுகிறேன்.
இங்கே உலக நாடுகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். உதவி பொருட்களைச் சென்றடைய அவ்வப்போது ஓரிரு மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும்,
பிணையக் கைதிகள் பாதுகாப்பாக வெளியே வரவும் இது போன்ற போர் நிறுத்தங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், முழு வீச்சில் போர் நிறுத்தம் என்பதில் சாத்தியம் இல்லை. ஏனென்றால் அது எங்கள் போர் யுக்தியை பாதிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.