தீவிரமடையும் இஸ்ரேல் – காசா போர் தலையை நுழைக்கும் ஈரான் – 3ஆம் உலகப் போரை நோக்கி நகர்கிறதா?
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் அதிகரித்தால் ஈரானும், ஹிஸ்புல்லாவும் இந்த போரில் பங்கேற்க நேரிடும் என ஹமாஸ் நிர்வாகி ஒருவர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் - காசா போர்
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7 ) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.
இஸ்ரேல் தனது படைகள் மூலம் காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் தங்கள் நாட்டு எல்லை பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
போரில் ஈரான் பங்கேற்பா?
இந்த நிலையில் காசாவை அழிக்க வேண்டும் என்று இஸ்ரேல் நினைத்தால் இந்த போரில் ஈரானும், ஹிஸ்புல்லாவும் பங்கேற்க நேரிடும் என ஹமாஸ் நிர்வாகி அலி பராக்கே என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட சர்ப்ரைஸ் தாக்குதல் ஒரு சில முக்கிய ஹமாஸ் நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சமரச முயற்சியில் சில உலக நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் மத்தியில் சமரச முயற்சியில் கத்தார் நாடு ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
என்ன தான் சமர முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டாலும் இந்த போர் உக்கிரமான நிலையை அடைந்த பின்னரே அடங்கும் என சொல்லப்படுகிறது.