ஐபிஎல் ஏலத்துக்கு தயாரான 8 தமிழக வீரர்கள் இவர்கள் தான்
இந்த வருட ஐபிஎல் போட்டியின் வீரர்கள் ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் வரும் 18ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது. 292 வீரர்கள் அடங்கிய ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படியலில் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
2020 ஐபிஎல் ஏலத்தில் 10 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். இவர்களில் வருண் சக்ரவர்த்தி, எம். சித்தார்த்தை கொல்கத்தா அணியும் சாய் கிஷோரை சென்னை அணியும் தெரிவு செய்தன. ஷாருக்கான், ஹரி நிஷாந்த், பெரியசாமி, மணிகண்டன், பாபா அபராஜித், முகமது, அபினவ் ஆகிய 7 தமிழக வீரர்களை எந்த அணியும் அப்போது தெரிவு செய்யப்படவில்லை.
நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கிண்ணம் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த் உள்ளிட்ட பல தமிழக வீரர்கள் தெரிவாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் போட்டியில் 11 தமிழக வீரர்கள் விளையாடினார்கள்.
அவர்களில் முரளி விஜய்யும் எம். சித்தார்த்தும் அவரவர் அணிகளால் தக்கவைக்கப்படவில்லை.
இருப்பினும் எம். சித்தார்த் 2021 ஐபிஎல் ஏலத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஏலப்பட்டியலில் முரளி விஜய்யின் பெயர் இடம்பெறவில்லை.
தற்போது ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 8 தமிழக வீரர்களுக்கும் அடிப்படை தொகை ரூ.20 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.