பிப்ரவரியில் நடக்கிறது ஐபிஎல் 14வது போட்டிகளுக்கான ஏலம்
14வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் பிப்ரவரி 10ம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 13வது ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் குழு கூட்டத்தில், 2021ம் ஆண்டுக்கான போட்டிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த போட்டிகள் இந்தியாவில் நடக்குமா? அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படுமா? என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒருவேளை இந்தியாவில் நடத்தப்பட்டால் போட்டி நடக்கும் மைதானங்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் விவரங்களை ஜனவரி 21-ந்தேதி முதல் அந்த மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு அணி மாறும் வீரர்கள் விவரங்களையும் அறிவித்து விட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.