ஐபிஎல் கிரிக்கெட்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அசத்தல் வெற்றி
சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் தவான்,ப்ரித்வி ஷா அதிரடியால் டெல்லி அணி அசத்தல் வெற்றி பெற்றது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக டு பிளசிஸும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கினர். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் ரன் எதுவும் இன்றி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் ருதுராஜும் 5 ரன்களில் வெளியேறினார்.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோயின் அலி- சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24 பந்துகளில் 36 ரன்கள் அடித்த மோயின் அலி, அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு (23 ரன்கள்) ஓரளவு தாக்குப்பிடித்தார்.
எனினும் மறுமுனையில் சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். ஏதுவான பந்துகளை சிக்சருக்கு விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் எடுத்து ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி ரன் எதுவும் இன்றி போல்டு ஆகி வெளியேறினார். கடைசி கட்ட ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா அதிரடி காட்டினர். குறிப்பாக சாம் கரன் டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கரன் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க வீரர்களாக தவான் மற்றும் ப்ரித்வி ஷா இருவரும் களமிறங்கிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி அணியை வெற்றியை நோக்கி எளிமையாக அழைத்து சென்றனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் சென்னை பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில் அணியின் ஸ்கோர் 138 ரன்கள் எட்டியபோது ப்ரித்வி ஷா பிராவோ பந்துவீச்சில் அவுட்டானார்.
இறுதியில் டெல்லி அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் விளாசி சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.