சொல்லிக் கொடுத்ததே நாங்க.. ரோஹித் எங்களுக்கே கிளாஸ் எடுக்காத - எச்சரித்த பாக். ஜாம்பவான்!
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் பதிலடி கொடுத்துள்ளார்.
ரோஹித் ஷர்மா
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்நாட்டு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் அதிருப்தியடைந்தனர். இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக், இந்திய அணி பந்தை சேதப்படுத்தி, 15 வது ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்விங் செய்வதாக குற்றம் சாட்டினார்.
மேலும், 15 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட பந்து எப்படி ரிவர்ஸ் ஆகும்? என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருந்தார். இதுகுறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா "எந்த சூழ்நிலையில் பந்து ரிவர்ஸ் ஆகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடும் சூரிய வெப்பம் இருக்கும் நிலையில், வறண்ட பிட்ச்களில் பந்து ரிவர்ஸ் ஆகிறது. நாங்கள் மட்டும் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யவில்லை. அனைத்து அணிகளும் செய்கின்றன" என்றார்.
இன்சமாம் உல் ஹக்
இந்நிலையில் இதை கேட்டு கோபமடைந்த இன்சமாம் "முதலில் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ரோஹித் ஷர்மா பந்து ரிவர்ஸ் ஆவதை ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே, அதை நாம் சரியாக கண்டுபிடித்துள்ளோம். இரண்டாவது, ரோஹித் ஷர்மா எப்படி ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது, எந்த அளவு சூரிய வெப்பத்தில், எது போன்ற பிட்ச்களில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என்றெல்லாம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதை உலகுக்கு சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படியெல்லாம் பேசக்கூடாது என அவரிடம் கூறுங்கள். ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி கேட்ட நிருபர் தவறான கேள்வியை கேட்டுள்ளார்.
நான் அம்பயர்கள் தங்கள் கண்களை திறந்து வைக்க வேண்டும் என்றும், பந்து எப்படி ரிவர்ஸ் ஆகிறது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும் என்றும் தான் கூறினேன். இப்போதும் அதையே தான் நான் சொல்கிறேன். அம்பயர்கள் தங்கள் கண்கள் மற்றும் மனதை திறந்து வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.