லண்டனில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல்: தேசிய கொடி அவமதிப்பு!
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது மர்மநபர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடில்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய புகாரை பதிவு செய்தது.
மேலும் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி சம்மன் அனுப்பப்பட்டது. இதனிடையே வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது.
தேசிய கொடி அவமதிப்பு
அதே நேரத்தில் சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் அடையாளம் காண்பது, கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து தூதரக அலெக்ஸ் எல்லிஸ் தனது சமுகவலைதளத்தில் இந்திய தூதரகத்தின் மீதான அவமானகரமான செயல்களை கண்டிக்கிறேன். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியதாதது என பதிவிட்டுள்ளார்.