பிரதமர் மோடியின் அயராத உழைப்பால் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது- முதல்வர் பழனிசாமி புகழாரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது - நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று வாகை சூடுவார்கள். பிரதமர் மோடி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் இந்தியாவை உயர்த்த இரவு பகல் பாராமல் உழைக்கிறார்.
உலக அரங்கிலே இந்தியா வல்லரசாக உழைத்துக்கொண்டிருக்கிறார் பிரதமர். பிரதமர் மோடியின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டு தேவையான திட்டங்களைக் கேட்கும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக விளங்க மோடி உதவி செய்கிறார்.
இதற்காக நான் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்ய முன் வந்துள்ளனர்.
ஈரோடு மக்களின் பெரும் கனவுத் திட்டமான அத்திக் கடவு, அவினாசி திட்டத்தையும் ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றி இருக்கிறது. காவிரி - கோதாவரி திட்டத்துக்கு பிரதமர் மோடி நிச்சயம் உதவி செய்வார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு 950 கோடி ரூபாயிலே ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. திருமண உதவித்திட்டத்தின் கீழ் 12,51,000 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். 52 லட்சம் பேருக்கு மடிக்கணி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கட்டுப்படுத்தினோம். கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்காக விலையில்லா அரசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருகள் வழங்கப்பட்டன என்று பேசினார்.