வெளிநாடுகளிலிருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர்க்க முடியாது - பாரதி பிரவீன் பவார்
ரஷ்யா போர்
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
ஆபரேசன் கங்கா
ரஷ்ய போரில் உக்ரைனில் இந்தியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கக்கோரி இந்திய மக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, உக்ரைனில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களை, அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டது. இதன் பின்னர், ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரிலிருந்து 5 விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து 2 விமானங்களும் இயக்கப்பட்டன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டார். ருமேனியா தலைநகர், புகாரெஸ்ட் விமான நிலையத்திலிருந்து இந்தியர்களை மீட்டு டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
ரஷ்ய தூதரக அதிகாரி
போரின் காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய மாணவர்கள் ரஷ்யாவில் மீண்டும் தன் படிப்பினை தொடரலாம் என்று ரஷ்ய தூதரக அதிகாரி தெரிவித்தார். மேலும், மாணவர்கள் உக்ரைன் பல்கலைக்கழங்களில் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், ரஷிய பல்கலைக்கழகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். உக்ரைனில் செலுத்தப்பட்ட கட்டணம் ரஷ்யாவில் போதுமானதாக இருக்காது. உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் தங்கள் மதிப்பெண்கள் மற்றும் பிற கல்வி சான்றிதழ்களுடன் ரஷ்ய மாளிகையைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் பெற்றோருடன் தொடர்பு கொள்ளும் ரஷ்ய பல்கலைக்கழகங்களுக்கு இந்த விபரங்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

மாணவர்களுக்கு இடமில்லை
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.