இந்தியாவின் கடன் தொகை உயர்வு - எத்தனை லட்சம் கோடி தெரியுமா?
இந்தியாவின் கடன் தொகை அடுத்த ஆண்டு உயர உள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்
2023-24 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23 ம் தேதி தாக்கல் செய்தார். இதன் பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நாட்டின் கடன் தற்போது எவ்வளவு உள்ளது, அடுத்த நிதியாண்டில் அது எவ்வளவாக அதிகரிக்கும் என்பது குறித்த தகவல்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் தெரிவித்தார்.
கடன் தொகை உயர்வு
கடந்த 2023- 2024 நிதியாண்டில் நமது நாட்டின் மொத்தக் கடன் ₹ 171.78 லட்சம் கோடியாக உள்ளது. இது வெளிநாட்டுக் கடன் உட்பட அனைத்து கடன்களின் மொத்த மதிப்பாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 58.2 % உள்ளது. 2024-25 ம் ஆண்டில் இந்த கடன் தொகை ₹ 185 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அது அப்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.8 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
15வது நிதிக்குழு பரிந்துரைத்தபடி மாநில அரசுகள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 4% கடனாக வாங்கிக் கொள்ளலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2022-23 நிதியாண்டில் நாட்டின் கடன் தொகையானது ரூ.155.8 லட்சம் கோடியாக இருந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான முதல் பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்ற 2013-14 நிதியாண்டில் நாட்டின் கடன் தொகை ரூ.58.6 லட்சம் கோடியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.