இந்தியாவுடனான உறவில் விரிசல்; என்ன நடக்கிறது கனடாவில்? கவனத்தை திருப்பிய உலக நாடுகள்!
காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா – கனடா
கனடா, சுர்ரே நகரில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். சீக்கியர்களுக்கு இந்தியாவிடம் இருந்து தனி நாட்டை பெறுவதற்கு இவர் முயற்சி மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மத்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வெளிநாட்டை சேர்ந்த எவரும் இங்கு வசிக்கும் குடிமகனை கொல்வது என்பது ஏற்க முடியாதது.
வெடிக்கும் விவகாரம்
அது கனடாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிக்கொண்டுவர கனடா அரசுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்திய உயர் அதிகாரி ஒருவரை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது.
இதற்கு பதிலடியாக கனடா தூதரக உயர் அதிகாரியை இந்தியாவை விட்டு 5 நாட்களில் வெளியேறுமாறு மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனால் இரு நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு, சீக்கியர்கள் சுமார் 7.77 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.
இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம். ஆனால், கணிசமான எண்ணிக்கையில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.