இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட்: முதன்முறையாக பெண் நடுவர்
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடுவராக பணியாற்றுகிறார் கிளார் போலோசாக். ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரை 1-2 என இழந்த இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது, டெஸ்ட் தொடரில் 1-1 சமன் ஆனது. இன்று இரு அணிகளும் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் சிட்னி டெஸ்டில் 4-வது நடுவராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளார் போலோசாக் பணியாற்றுகிறார்.
இதன்மூலம் ஆண்களுக்கான டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.
இவர் ஏற்கெனவே, ஆண்களுக்கான ஒருநாள் ஆட்டத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் கள நடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.