திமுக ஒரு நாடக கம்பெனி; சிந்தித்து வாக்களியுங்கள் - சாடிய பாரிவேந்தர்
திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதாக பாரிவேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிவேந்தர்
தேசிய ஜனநாயக கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.
NDA கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தர் 3-வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், RT மலை பகுதியில் தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், 5 ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த எண்ணற்றத் திட்டங்களை புத்தகமாக வெளியிட்டோம். பெரம்பலூருக்கு ரயில்வே திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். வேட்டை நாயக்கர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சியில் ஊழல்
1,200 மாணவர்களுக்கு SRM பல்கலைகழகத்தில் உயர் கல்வி மூலம் பட்டதாரிகளாக வழங்கிய திட்டம் மீண்டும் தொடரும். பெரம்பலூர் தொகுதியில் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும். திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித் தொகை, பாதி பேருக்கு கூட தரவில்லை.
திமுகவினர் ஊழல் பணத்தை கொண்டு அரசியலுக்கு வருவதும், அதனை தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணமாக கொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து, காவல்காரன் பட்டி கிராமத்திற்கு வருகை தந்த பாரிவேந்தருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று, நோட்டீஸ் வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசுகையில், நன்கு சிந்தித்து நல்லவர்களுக்கும், நியாயமானவர்களுக்கும் வாக்களிக்க வேண்டும். திமுக ஒரு நாடக கம்பெனி. திமுக-வினர்
மக்களை பற்றி கவலைபட மாட்டார்கள். இப்பகுதி மக்களின்
கோரிக்கையான மின் மோட்டர் பொருத்தும் பணி உறுதியாக செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.