மாணவி தற்கொலை..கையில் கிடைத்த கடிதம் - கான்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்தது என்ன?
கான்பூர் ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கான்பூர் ஐ.ஐ.டி
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சனிகவான் பகுதியைச் சேர்ந்தவர் பிரகதி கார்யா. இவருக்கு வயது 28.இவர் கான்பூர் ஐ.ஐ.டி.யில் எர்த் சயின்ஸஸ் துறையில் பி.எச்.டி. பட்டம் பெறுவதற்காக, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில், பிரகதி கார்யா தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அங்கு வந்து பிரகதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை
அப்போது அவரது அறையில் ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல என்று பிரகதி எழுதியிருப்பதாக தெரிவிக்கபட்டு உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக கான்பூர் ஐ.ஐ.டி.யில் இந்த ஆண்டு நடந்துள்ள 4-வது தற்கொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.